மோடி அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தால் பலன் உண்டா என்று கேட்டோமே.. இங்க பாருங்க அசந்துருவீங்க!
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தால், ஓராண்டில் 20,000 மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி அரசு அறிமுகம் செய்த ஸ்வச் பாரத் திட்டத்தால் நாட்டில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டிருக்கும். இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலான ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை என்பது 2017 ஆம் ஆண்டு 8 லட்சத்து 20 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு இது 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. அதாவது இக்காலகட்டத்தில், சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
டயோரியா நோய்
பாதுகாக்கப்பட்ட குடிநீர், கையை சுத்தப்படுத்தி உணவு உண்ணும் பழக்கம், உணவு பாதுகாப்பு, கழிவறை பயன்பாடு அதிகரித்தது, திறந்தவெளியில் மலம் கழிப்பது குறைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒன்றிணைந்து தொற்று நோய்களை கட்டுப்படுத்தி இறப்பு எண்ணிக்கையை குறைத்து உள்ளன.
முறையான கழிவு அகற்றுதல் வசதியின்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காது போன்றவைதான் குழந்தைகளை டயோரியா போன்ற நோய்கள் தாக்குவதற்கு 88 சதவீத காரணம்.
நோய் பரவல் குறைவு
குழந்தைகளுக்கான டயோரியாவை கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக ஆறு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, தொற்று நோயால் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது. ஸ்வச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டம் தோற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
கழிவறைகள் அவசியம்
தூய்மை இந்தியா திட்டம் 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 85.2 மில்லியன் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டின் 718 மாவட்டங்களில் 459 மாவட்டங்கள் திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களில் 9.3 சதவீத குழந்தைகளுக்கு டயோரியா பாதிப்பு ஏற்பட்டது என்றால் திறந்தவெளி மலம் கழிக்கக் கூடிய மாவட்டங்களில் 13.9 சதவீதம் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவது தெரிய வருகிறது.
தாய்மார்கள் நலம்
திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டங்களில் தாய்மார்கள் 62.5 சதவீதம் பேர் ஆரோக்கியமான உடல் எடையுடன் உள்ளனர். திறந்தவெளி மலம் கழிக்கக் கூடிய பகுதிகளில் உள்ள தாய்மார்கள் 57.5 சதவீதம் பேர்தான் சரியான எடையுடன் உள்ளனர். ஐநாவின் இந்த புள்ளி விவரத்தை இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ் செய்தியாக வெளியிட்டுள்ளது.