தூய்மை இந்தியா திட்டத் தலைவர் விஜயலட்சுமி ஜோஷி திடீர் விருப்ப ஓய்வு... மோடி அரசுக்கு அடி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியாத் திட்டத்தின் தலைவராக செயல்பட்டு வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜயலட்சுமி ஜோஷி திடீரென விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் செயலாளராக இருந்து வந்தார். தூய்மை இந்தியாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் அப்பொறுப்பிலிருந்து விஜயலட்சுமி ஜோஷி விருப்ப ஓய்வு கோரியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1980ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான விஜயலட்சுமி, பணியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் விருப்ப ஓய்வு கோரியுள்ளதாக விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
இவர் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜோஷி முன்பு பஞ்சாயத்து ராஜ் அமைச்சரவையில் செயலாளராக இருந்து வந்தார். பின்னர் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறைக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் தூய்மை இந்தியாத் திட்டத் தலைவராக மாற்றப்பட்டார்.
குஜராத் மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜோஷி, கடந்த 2011ம் ஆண்டு மத்தியப் பணிக்கு மாற்றப்பட்டார். இவரது கணவர் ஜி.பி. ஜோஷி. இவரும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான். இவர் 2008ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஷியின் விலகலுக்கு சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் தூய்மை இந்தியா திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது. மோடி இந்தத் திட்டத்தின் மீது மிகுந்த அக்கறை காட்டி வந்தார். ஆனால் திட்டத்தால் போதிய பலன் கிடைக்கவில்லை என்பதால் அவர் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் விஜயலட்சுமி ஜோஷி திடீரென ராஜினாமா செய்து விலகியுள்ளார்.