"ஸ்வச் பாரத்"தின் மறுபக்கம்.. மோடியின் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் டாய்லெட்டே கிடையாதாம்!
அகமதாபாத்: பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் அனந்தி பென் படேல் ஆகியோரின் சொந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதியே இல்லை என்ற அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) குறித்து மோடி தொடர்ந்து முழங்கி வருகிறார். ஆனால் அவரது சொந்த ஊரிலேயே அரசுப் பள்ளிக் கூடத்தில் கக்கூஸ் இல்லை என்பது கேலிக் கூத்தாகியுள்ளது.
குஜராத் மாநிலம் வத்நகர்தான் மோடியின் சொந்த ஊர். அதேபோல முதல்வர் அனந்தி பென் படேலின் சொந்த ஊர் விஜப்பூர். இந்த இரண்டு ஊரிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் டாய்லெட் வசதி கிடையாதாம். இந்தத் தகவலை குஜராத் சட்டசபையில் மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் செளடாஸ்மா தெரிவித்தார்.
விஜப்பூர் மற்றும் வத்நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கம் சரி, மாணவிகளுக்கும் சரி கழிப்பறை வசதியே கிடையாது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
குஜராத் மாநில அரசு 2016-17ம் ஆண்டு 7 லட்சம் கழிப்பறைகளைக் கட்ட ரூ. 780 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு புள்ளிவிவரப்படி குஜராத்தில் 33 லட்சத்து 21 ஆயிரத்து 47 வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பிரதமர் மோடியின் சொந்த மாவட்டமான மேசானாவில் மட்டும் 14 ஆயிரத்து 291 வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. முதல்வரின் சொந்த மாவட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.