அரவிந்த் சுப்பிரமணியத்தை தொடர்ந்து தாக்கும் சு சாமி!
டெல்லி: மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிமணியன் யார் என்பது மத்திய அரசுக்கு விரைவில் தெரிய வரும். அது வரை என் கோரிக்கையை ஒத்தி வைக்கிறேன் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
டெல்லியில் வியாழக் கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணிய சாமியிடம், அரவிந்த் சுப்பிரமணியனுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகள் மற்றும் அருண் ஜேட்லியின் ஆதரவு நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சு சாமி, "அரவிந்த் சுப்பிரமணியனைப் பதவி நீக்கம் செய்வது குறித்து பிரதமரிடமும், பாஜக தேசியத் தலைவரிடமும் என்னால் பேச முடியும். அருண் ஜேட்லி கூறியுள்ளது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அவர் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளலாம்," என்றார்.
முன்னதாக, அரவிந்த் சுப்பிரமணியனுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று புதன்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார்.
தனது சமூக வலைத் தளப் பதிவு ஒன்றில், "அரவிந்த் சுப்பிரமணியன் யார் என்பதும், இந்தியாவுக்கு எதிராக அவர் எப்படிச் செயல்பட்டார் என்பதும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்குத் தெரியும். இருந்தபோதிலும் அவர் தேசத்தின் மிகப்பெரிய சொத்து என்று அரசு தொடர்ந்து கருதினால், நான் கூறியது உண்மை என்பது தெரிய வரும் நாள் வரை எனது கோரிக்கையை ஒத்திவைக்கிறேன்,' என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு எதிராகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.