"தாத்தா" மாதிரி பேசக் கூடாது.. ரகுராம் ராஜனுக்கு சாமி அட்வைஸ்!
டெல்லி: நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதாகவும், அது நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தாகும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பேச்சுக்கு சுப்பிரமணியம் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனை தாத்தா என்று கிண்டலாக கூறியுள்ள சாமி, ராஜன் அவரது வேலை என்னவோ அதை மட்டும் செய்தால் போதும் என்றும் சாமி கூறியுள்ளார்.
சகிப்புத்தன்மையும், பரஸ்பர மரியாதையும் தற்போது குறைந்து விட்டதாகவும், அது பெருக வேண்டியது அவசியம் என்றும் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். மேலும், கருத்துக்களைச் சொன்னதை எதிர்த்து வாய் மூலமாக ஒருவரை அவமரியாதை செய்வதோ, உடல் ரீதியாக தாக்குவதோ அனுமதிக்கப்படக் கூடாது என்றும் ராஜன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியம் சாமி. இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கிக்குப் போக வேண்டும். தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தாத்தா மாதிரி பேசக் கூடாது.
ரிசர்வ் வங்கி நாசமாக ராஜன்தான் காரணம். பிரதமர் உடனடியாக இவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். என்ன சகிப்புத் தன்மை? தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டுள்ளார் சாமி.