தாய் நாட்டை நேசிக்காத அமீர்கானுக்கு ஆசிரியர் அவசியம்.. பாரிக்கருக்கு ஆதரவாக குதித்த சு.சுவாமி
டெல்லி: சகிப்பின்மை அதிகரித்து வருவதாக நடிகர் அமீர்கான் கூறியதை விமர்சித்த பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. சுப்பிரமணிய சாமி களமிறங்கியுள்ளார்.
ஒன்றும் அறியாத அமீர்கானுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கான் டெல்லியில் கடந்த நவம்பரில் நடந்த ஒரு விழாவில் பேசும்போது, நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குறிப்பிட்டார்.
அமீர்கான் கருத்து
நாம், குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா? என்று முதல் முறையாக என் மனைவி கிரண் என்னிடம் கேட்டார் என்று அமீர்கான் கூறியிருந்தார்.
பாரிக்கர் தாக்கு
இந்நிலையில் புனேயில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மனோகர் பாரிக்கர், அமீர்கானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
எனது வீடுதான் பெரிது
நடிகர் ஒருவர் பேசியபோது, தனது மனைவி இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக கூறியதாக குறிப்பிட்டார். இது ஆணவம் நிறைந்த கருத்தாகும். ஒருவேளை நான் ஏழையாகவும், சிறிய வீட்டில் வசிப்பவராக இருந்தாலும் கூட எனது வீட்டைத்தான் விரும்புவேன்.
துணிச்சல் வந்துள்ளது
நாட்டுக்கு எதிராக பேசுவதற்கு அவர்களுக்கு எப்படி துணிச்சல் அல்லது தைரியம் வந்தது? அத்தகைய நபர்களுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மனோகர் பாரிக்கர் பேசினார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
|
ஆசிரியர் தேவை
சுப்பிரமணிய சாமி இதுகுறித்து கூறுகையில், அமீர்கான் விவகாரத்தில் மனோகர் பாரிக்கரின் கருத்து தொடர்பாக இவ்வளவு கோஷம் எழுப்படுவது ஏன்? தாய் நாட்டை நேசிப்பதற்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை, இதுகுறித்து அமீர்கானுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் அவருக்கு அதனை கற்றுக்கொடுக்க ஆசிரியர் தேவை என்றார்.