5 தமிழக மீனவர்களையும் திஹார் சிறைக்கு மாற்றக் கோரும் சாமி- ராஜபக்சே, மோடிக்குக் கடிதம்!
டெல்லி: இலங்கை நீதிமன்றத்தால் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று கூறி ஐந்து தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐந்து மீனவர்களையும் டெல்லி திஹார் சிறைக்கு மாற்றலாம் என்றும் அதன் பின்னர் நமது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்றும் அவர் கூறுகிறார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர்.
அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேலும் 3 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் 5 மீனவர்கள் உள்படஇந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த கொழும்பு உயர்நீதிமன்றம் 5 ராமேஸ்வரம் மீனவர்கள் உட்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது தமிழக மீனவர்களும் கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Written letter to Pres Rajapaksa & Namo that under a 2010 bilateral pact the convicted Tamils be transferred to Tihar to appeal to our SC
— Subramanian Swamy (@Swamy39) October 31, 2014
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவிட் செய்தியில், 2010ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழர்களை திஹார் சிறைக்கு மாற்றி, அங்கு கொண்டு வந்த பின்னர் நமது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கும், நமோவுக்கும் (பிரதமர் நரேந்திர மோடி) கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார் சாமி.
சட்டம் தெரியாமல் போராட்டம் நடத்தும் "பொறுக்கிகள்".. சீண்டும் சாமி!
இந் நிலையில் ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் தூக்குத் தண்டனை விதித்திருப்பதை எதிர்த்து போராட்டம் நடத்துவோரை பொறுக்கிகள் என்று விமர்சித்துள்ளார் சுப்பிரமணியம் சாமி.
தமிழ்நாட்டில் யார் போராட்டம் நடத்தினாலும் அவர்களைப் பொறுக்கிகள் என்றுதான் அழைக்கிறார் சாமி. தமிழக கட்சிகள், அமைப்புகள் நடத்தும் போராட்டங்களை பொறுக்கிகளின் போராட்டம், எலிகள் என்று அழைப்பது அவரது வாடிக்கை.
The passage back to India beckons Welikada prisoners - The Hindu http://t.co/ZsfVrEeCKC, Porkis and DDs demonstrating not knowing the law!!!
— Subramanian Swamy (@Swamy39) October 31, 2014
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் ஐந்து தமிழக மீனவர்களை மீட்பதற்காக நடந்த போராட்டங்களையும் கூட அவர் வழக்கம் போல வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டில், இந்து நாளிதழில் வெளியான ஒரு செய்தியின் இணைப்பைக் கொடுத்து அதற்குக் கீழ், சட்டம் குறித்துத் தெரியாமல் "பொறுக்கிகளும், டிடி"களும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார் சாமி.
சாமி இணைத்துள்ள அந்த இந்து நாளிதழ் செய்தியைப் பார்க்கப் போனால் அந்த செய்தியை நீக்கி விட்டதாக அதில் தகவல் வருகிறது.