ஜெ. விடுதலைக்கு எதிரான அப்பீல் மனு விசாரணையில் ஒருதரப்பாக சேர்க்கக் கோரி சு.சுவாமி மனு!!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தம்மையும் ஒருதரப்பாக சேர்க்கக் கோரி பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சில திருத்தங்கள், விவரங்களை கேட்ட சுப்ரீம்கோர்ட் பதிவாளர் அலுவலகம், அரசு தரப்பு விளக்கம் அளித்த பிறகு, அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதேபோல, அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த மனுவும், சில குறைபாடுகள் களையப்பட்ட பிறகு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கர்நாடகா மற்றும் தி.மு.க. தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின் போது தம்மையும் ஒருதரப்பாக சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.