குஜராத்தில் சுவாமி சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவித்ததால் சர்ச்சை
சூரத்: குஜராத்தின் சூரத் அருகே சுவாமி நாராயண் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
சூரத் மாவட்டத்தின் லக்ஸனா கிராமத்தில் சுவாமி நாராயண் மிஷன் பள்ளி உள்ளது. கோடை விடுமுறைக்குப் பின்னர் கடந்த திங்கள்கிழமையன்று பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது பள்ளியில் இருந்த சுவாமி நாராயண் சிலைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர் அணியும் சீருடையான காவி டவுசர், வெள்ளை சட்டை, காலில் ஷூ அணிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
கோடை விடுமுறையில் இந்த பள்ளியில் 20 நாட்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமான ஷாகா நடைபெற்றிருக்கிறது. அப்போதுதான் இந்த சீருடையும் அணிவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பாஜக தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர்சிங் வகேலா கூறுகையில், கோயில் நிர்வாகிகள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும் என்றார்.
குஜராத் மாநில பாஜக தலைவர் விஜய் ரூபானி கூறுகையில், சுவாமி சிலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் சீருடை அணிவிக்கப்பட்டிருப்பதில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றார்.