ரகுராம் ராஜனைத் தொடர்ந்து அரவிந்த் சுப்ரமணியனுக்கு 'வேட்டு' வைக்கும் சு.சுவாமி
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனைத் தொடர்ந்து மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு தரக் கூடாது; அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கலகக் குரல் எழுப்பியவர் சுப்பிரமணியன் சுவாமி. ரகுராம் ராஜன் மனதளவில் இந்தியராக இல்லை; அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையைத் தக்க வைக்க அந்நாட்டுக்கு அடிக்கடி சென்று வருகிறார் என்று பிரதமர் மோடிக்கு 2 முறை கடிதம் எழுதினார் சு.சுவாமி.
இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் தாம் 2-வது முறையாக நீட்டிக்க விரும்பவில்லை என அறிவித்தார் ரகுராம் ராஜன். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார் சு.சுவாமி. தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் அறிவுசார் சொத்துகள் குறித்த ஆராய்ச்சியை எதிர்த்தவர்தான் அரவிந்த் சுப்ரமணியன்; அமெரிக்காவின் மருத்துவதுறை நலன்களுக்காக இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியவர் அரவிந்த் சுப்ரமணியன், ஜி.எஸ்.டி. மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் பிடிவாதமாக இருக்க காரணமே ஜேட்லியின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்; ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அடுத்தடுத்து பதிவுகளைப் போட்டுள்ளார்.
Who said to US Cong on 13/3/13 the US should act against India to defend US Pharmaceuticals interests? Arvind Subramanian MoF !! Sack him!!!
— Subramanian Swamy (@Swamy39) June 22, 2016
Subramaniam Swami now guns for Arvind Subramanian Economic Advisor to NDA. Target is Arun Jaitley not Arvind Subramanian .
— digvijaya singh (@digvijaya_28) June 22, 2016
இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், சுப்பிரமணியன் சுவாமியின் உண்மையான இலக்கு அரவிந்த் சுப்ரமணியன் அல்ல; நிதி அமைச்சர் அருண்ஜேட்லிதான் என குறிப்பிட்டிருக்கிறார்.