அரவிந்த் சுப்ரமணியன் மீது அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது... சு.சுவாமிக்கு அருண்ஜேட்லி பதிலடி
டெல்லி: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மீது அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியவர் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி. இதனாலேயே அவர் தமக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு வேண்டாம் என அறிவித்தார்.
Govt has full confidence in CEA Arvind Subramanian, he has provided valuable insights from time to time: FM Jaitley pic.twitter.com/KjBRMfOsWI
— ANI (@ANI_news) June 22, 2016
தற்போது மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனை நீக்க வேண்டும் என்று கலகக் குரல் எழுப்புகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது இந்த கருத்தை மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி நிராகரித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜேட்லி, சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து அவரது சொந்த கருத்து; பாஜகவின் கருத்து அல்ல. அரவிந்த் சுப்ரமணியன் மீது அரசுக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. அரசுக்கு தேவையான அனைத்து தருணங்களிலும் அவர் ஆலோசனை வழங்கி வருகிறார் எனவும் பதிலளித்துள்ளார்.
ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரை சு.சுவாமி இலக்கு வைப்பதே நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு நெருக்கடி கொடுத்து அந்த பதவியை கைப்பற்றத்தான் என காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.