அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் – ராஜஸ்தானில் மட்டும் 100 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 900 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்ற மாநிலங்களை விட இங்கு தான் பன்றிக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சலுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர்.
அங்கு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,542 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை நடந்துள்ளது.
இதன் மூலம் 831 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதில் 42 பேர் பலியாகி உள்ளனர்.மேலும், கடந்த ஞாயிறு அன்று 99 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது.
கடந்த 6 நாள்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் புள்ளி விவரங்களை ஆராயும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போக்கு தெரியவருகிறது.எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபாலில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அடிப்படை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.