வெயில் வந்தும் வீரியம் குறையாத பன்றிக்காய்ச்சல்- பலி 1911 ஆக உயர்வு, 32,000 பேர் பாதிப்பு
டெல்லி: வெயில் வந்தால் ஹெச்1என்1 வைரஸ் வீரியம் குறைந்து விடும், என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும் பன்றிக்காய்ச்சலினால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாடு முழுவதும் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1911 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 32,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஞாயிறன்று அறிவித்துள்ளது.
ஹெச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவி வருகின்றது.
குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவி வருவதால் அச்சம் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இந்நோயால் 32,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மார்ச் 21ஆம் தேதி வரை 1,911 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிறன்று தெரிவித்துள்ளது.
குஜராத்தில் 410 பேர்
நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 410 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 400 பேரும், மராட்டியத்தில் 347 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 281 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா - தெலுங்கானா
கர்நாடகாவில் 77 பேரும், தெலுங்கானாவில் 75 பேரும், பஞ்சாப்பில் 53 பேரும், ஹரியானாவில் 45 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 36 பேரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.
ஹிமாச்சலபிரதேசம்
மேற்கு வங்கத்தில் 24 பேரும், ஆந்திராவில் 22 பேரும் உயிரிழந்துள்ள நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் 20 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 16 பேரும் மரணமடைந்துள்ளனர்.
32,233 பேர் பாதிப்பு
அதே போல சத்தீஸ்கரில் 18 பேரும், தமிழ்நாட்டில் 15 பேரும் பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். டெல்லி மற்றும் கேரளாவில் தலா 12 பேர், உத்தரகாண்டில் 11 பேர் என நாடு முழுவதும் நேற்று வரை இந்நோய்க்கு 1,911 பேர் பலியாகியுள்ளதாகவும், 32,233 பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெயிலுக்கு மடியும்
பன்றிக்காய்ச்சல் மரணத்தினால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பன்றிக்காய்ச்சல் வைரஸ்கள் விரைவில் மடிந்துவிடும் என்று கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.