கருப்பு பண பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்? என்ன செய்தார்கள்?
டெல்லி: உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்பு.
இதில் இந்தியாவை சேர்ந்த பிர்லா குடும்பதை சேர்ந்த யாஷ் பிர்லாவின் பெயர் இடம் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் அப்பட்டியலில் டெல்லியை சேர்ந்த குருஜித் சிங், ரித்திகா சர்மா, சையது முகமது மசூத் மற்றும் அவரது மனைவி சந்த் கவுசர் ஆகியோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
நேற்றுமுன்தினம் சுவிஸ் வெளியிட்டிருந்த பட்டியலில் டெல்லியை சேர்ந்த பெண்களான லதா சாஹ்னி மற்றும் சங்கீதா சாஹ்னி ஆகியோர் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதில் லதா சாஹ்னி மற்றும் சங்கீதா ஆகியோர் மாமியார் மருமகள் என்பதை பற்றி ஏற்கனவே பார்த்தோம். மற்றவர்களின் பின்புலம் இதோ:
குருஜித் சிங்: வேவ்குரூப் கம்பெனிகளின் இயக்குநர்தான் இந்த குருஜித் சிங். இந்த நிறுவனங்களின் உரிமையாளர் மதுபான தொழில் மன்னன் போன்டி சத்தா சமீபத்தில் கொல்லப்பட்டார். குருஜித் பெயர் 2012லேயே கருப்பு பண விவகாரத்தில் அடிபட்டது. வருமான வரித்துரை அப்போது நடத்திய ஆய்வில், குருஜித் சிங் வீட்டில் இருந்து ரூ.38 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
சையது முகமது மசூத் மற்றும் சந்த் மசூத்: மும்பையை சேர்ந்த சிட்டி லிமொசின் நிறுவனத்தின் தலைவர் இந்த சையது முகமது மசூத். சுமார் 1.25 மில்லியன் டாலர் மதிப்புக்கு சுவிஸ் வங்கியில் இவருக்கு கணக்கு இருந்துள்ளது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, முறைகேடு தொடர்பாக சிட்டி குரூப் மற்றும் மசூதின் மனைவி சந்த் மசூத் பெயரையும் வழக்கில் இணைத்திருந்தது.