இந்திய கருப்பு பண முதலைகள் இனி சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது.. போட்டாச்சு புது ஒப்பந்தம்
டெல்லி: இந்திய கருப்பு பண முதலைகளுக்கு இனிமேல் சுவிஸ் வங்கி சொர்க்கபுரியாக இருக்காது. அதற்கு ஏற்ற ஒப்பந்தத்தை இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான கருப்பு பண முதலைகளை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து குவித்து வைத்துள்ளனர். அந்த நாட்டு விதிமுறைப்படி, அவர்களின் தகவல்கள் வெளியே தரப்படமாட்டாது என்பது இதற்கு காரணம்.
இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது. அதன் ஒருபகுதியாக இந்தியா-சுவிட்சர்லாந்து நடுவே 'Joint Declaration' for implementation of Automatic Exchange of Information (AEOI) என்ற பெயரில் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சுவிஸ் வங்கியிலுள்ள இந்தியர்களின் அக்கவுண்ட் விவரங்களை இந்தியா ஆட்டோமெட்டிக்காக தெரிந்து கொள்ள முடியும். முதல் தகவல் 2019ம் ஆண்டு செப்டம்பரில் வெளியாகும்.
இந்த உடன்படிக்கை, கருப்பு பண ஒழிப்பிற்கு ஒரு முக்கிய பங்களிப்பு என நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம், 2018 செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக சுவிஸ் வங்கிகளிலிருந்து பணத்தை ஷிப்ட் செய்யும் முதலைகள் குறித்த விவரம் இந்தியாவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. அதுகுறித்த ஷரத்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
ஆனால், சுவிஸ் வங்கிகளில் இனிமேலும் கருப்பு பண முதலைகள் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல் போகச் செய்ய இந்த ஒப்பந்தம் உதவும். கருப்பு பண முதலைகள் வேறு நாடுகளின் வங்கிகளை தேடி அலைய வேண்டிவரலாம். பல நாடுகளும், இந்தியாவுடன் தங்களது வங்கி கணக்கு தகவல்களை பரிமாற தயாராக இருப்பதால், கருப்பு பணத்தை எங்கு பதுக்குவது என்ற சிக்கல் பெரு முதலைகளுக்கு எழலாம் என எதிர்பார்க்கிறது மத்திய அரசு.