ஹூரியத் மாநாடு கூட்டமைப்புக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி திடீர் முழுக்கு
ஶ்ரீநகர்: அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பில் இருந்து அதன் வாழ்நாள் தலைவரான சையத் அலி ஷா கிலானி ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட 26 பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பு அனைத்து ஹூரியத் மாநாடு. இதன் வாழ்நாள் தலைவர்தான் கிலானி. ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி பல்வேறு வடிவிலான போராட்டங்களை ஹூரியத் மாநாடு மேற்கொண்டது. காலப்போக்கில் 26 பிரிவினைவாத இயக்கங்கள் இருந்த இடம் தெரியாமலேயே போய்விட்டன.
அமைச்சர் வேலுமணி குறித்து அவதூறு.. கைதை ஆர்ப்பாட்டம்.. 43 பேருக்கு முன் ஜாமின்.. ஹைகோர்ட்
வீட்டுக் காவலில் கிலானி
தற்போதைய நிலையில் ஹூரியத் மாநாடு என்கிற பெயரளவிலான அமைப்பு மட்டுமே பிரிவினைவாத முகமாக இருக்கிறது. இதனால் இதை சுருங்கிப் போன ஒரு கட்சியாகவே ஊடகங்கள் பார்த்து வருகின்றன. இந்த அமைப்பின் தலைவரான சையத் அலி ஷா கிலானி கடந்த 30 ஆண்டுகளாக இந்திய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறார். 2010-ம் ஆண்டு முதல் கிலானி தொடர்ந்து வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
370-வது பிரிவை நீக்கிய பாஜக
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காஷ்மீரில் எந்த கிளர்ச்சியும் ஏற்படவில்லை.
ஜம்மு காஷ்மீரில் நிரம்பிய சிறைகள்
ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடைபெறாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மெகபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இன்னமும் ஓராண்டு காலமாக சிறைவாசம் அனுபவித்தும் வருகின்றனர். இந்த கால கட்டத்தில் அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பு எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கவும் இல்லை.
ஹூரியத்- கிலானி விலகல்
இதனால் ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு விரும்பிய அமைதி திரும்பியது. இந்த நிலையில் திடீரென அனைத்து ஹூரியத் மாநாடு கூட்டமைப்பில் இருந்தே விலகுவதாக அதன் முதுபெரும் தலைவர் கிலானி அறிவித்துள்ளார். தற்போது 90 வயதாகும் கிலானி, ஹூரியத் மாநாட்டுக்கு அனுப்பிய கடிதத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக போராடவில்லை எனவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஹூரியத் மாநாடு அமைப்பில் பிரச்சனை
மேலும், என்னை ஹூரியத் அமைப்பின் வாழ்நாள் தலைவராக நியமித்த அனைவருக்கும் கடிதங்களை அனுப்பி இருக்கிறேன். நமபக்த்தன்மை என்கிற வாள் உங்கள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் நீங்கள் செயல்படவில்லை. இது எனக்கு வேதனையையும் வலியையும் தருகிறது. எனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கிறே எனவும் கிலானி கூறியுள்ளார்.
முடிவுக்கு வரும் சகாப்தம்
இருப்பினும் முதுமை காரணமாகவே கிலானி, தீவிர அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் தனிநாடு கோருகிற பிரிவினைவாதிகளின் மிக மூத்த முகமாக கருதப்பட்டவர் கிலானி. தற்போது கிலானியின் சகாப்தம் முடிவுக்கு வரும் நிலையில் பிரிவினைவாத முழக்கமும் ஜம்மு காஷ்மீர் மண்ணில் முடிவுக்கு வரும் என்பது ஜனநாயகவாதிகளின் கருத்து.