தெஹ்ரிக்-இ-ஹுரியத் தலைவர் பொறுப்பில் இருந்து சையத் அலி ஷா கிலானி விலகல்!
தெஹ்ரிக்-இ-ஹுரியத் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சையத் அலி ஷா கிலானி பதவி விலகியுள்ளார்.
ஸ்ரீநகர் : தெஹ்ரிக்-இ-ஹுரியத் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சையத் அலி ஷா கிலானி பதவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக முகமது அஷ்ரப் ஷெகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சையத் அலி ஷா கிலானி தலைமையிலான தெஹ்ரிக்-இ-ஹுரியத் பிரிவினைவாத அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது. இதில் மூத்தத் தலைவர் முஹம்மது அஷ்ரஃப் ஷெராஹி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிலானிக்கு உடல்நலனில் பிரச்னை இருப்பதால் அவர் தனது தலைவர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப செயல்பட உடல்நிலை ஒத்துழைக்காததால் தான் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக கிலானி கூறியுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு ஹூரியத் மாநாட்டில் பிளவு ஏற்பட்டதையடுத்து காஷ்மீரில் தனி நாடு கோரும் பிரிவினை வாத அமைப்பாக தெஹ்ரிக்-இ-ஹுரியத் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக கடந்த 15 ஆண்டுகளாக கிலானி இருந்து வருகிறார்.
தற்போது தலைவர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், கிலானி தொடர்ந்து இந்த அமைப்பை வழிநடத்திச் செல்லும் ஆலோசனைகளை வழங்குவார் என்று கூறப்படுகிறது. 88 வயது கிலானியை விட தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷெராஹி சிறப்பாக செயல்படுவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.