இறந்துபோன மகனுக்கு ஹரித்வாரில் திதி கொடுத்த சில்வஸ்டர் ஸ்டாலோன்
ஹரித்வார்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டாலோன் தனது இறந்த மகனுக்கு இந்தியாவின் ஹரித்வாரில் இந்து முறைப்படி ஸ்ரார்தம் செய்து திதி அளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாலிவுட் திரைப்பட உலகில் ஏராளமான ஆக்ஷன் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். இவருடைய இளைய மகன் சாகே ஸ்டாலோன்.
இவரும் ஹாலிவுட் நடிகர் ஆவார். அத்துடன் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தந்தையுடன் இணைந்து 1990 ல் வெளிவந்த "ராம்போ-5", 1996 இல் வெளிவந்த டே லைட் ஆகிய 2 படங்களில் நடித்து இருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு மரணம்:
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டில் சாகே ஸ்டாலோன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவர் அதிக போதை மருந்து உட்கொண்டதால் இறந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.
கடும் மன உளைச்சலில் அப்பா:
மகன் மரணத்தால் ஸ்டாலோன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் இறந்துபோன தன்னுடைய மகனின் ஆத்மா சாந்தியடைய இந்தியாவில் ஹரித்வாரில் திதி கொடுக்க முடிவு செய்தார்.
ஹரித்வாரில் திதி:
அதற்காக தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் மைக்கேல், அவருடைய மனைவி மற்றும் மகன்களை ஹரித்வார் அனுப்பி அகால மரணமடைந்தவர்களுக்காக செய்யப்படும் "ஸ்ரார்தம்" என்னும் திதியை அளித்துள்ளார்.
கூட்டத்தை கூட்ட வேண்டாமே:
ரசிகர் கூட்டம் போன்றவற்றை தவிர்க்க தான் வரவில்லை என்றும், ரத்த சம்பந்தமுடையவர்களை வைத்து கொடுக்கலாம் என்பதாலேயே தன்னுடைய சகோதரரை வைத்து திதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.