இனிதாக நடந்து முடிந்தது ஸ்ரீசாந்த்-புவனேஸ்வரி திருமணம்...
பாலக்காடு: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கும், அவரது காதலியும் ஜெய்ப்பூர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.
சூதாட்ட புகாரில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீசாந்த் தனது காதலி புவனேஷ்வரி குமாரியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது திருமணத்திற்கு குஜராத் முதல்வரும், பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடி வருவார் என வதந்திகள் நிலவியது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் சூதாட்டம்...
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஸ்ரீசாந்த், ஆறாவது பிரிமியர் தொடரில் விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப் பட்டது.
வாழ்நாள் தடை...
அதனைத் தொடர்ந்து அவருக்கு, கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,).
திருமணம்...
இந்நிலையில் ஜாமீனில் வெளி வந்துள்ள ஸ்ரீசாந்த்துக்கும், ஜெய்ப்பூர் , திவான்புர ராஜகுடும்பத்தை சேர்ந்தவரும், தங்கநகை பேஷன் டிசைனருமான, புவனேஸ்வரி குமாரி ஷெகாவத்துக்கும், திருச்சூர் அருகிலுள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று காலை, 7:40 மணிக்கு திருமணம் நடந்தது.
வரவேற்பு...
அதனைத் தொடர்ந்து, அவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கொச்சி லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது.
காதல் பூத்தது....
கடந்த, 2006ல், ஜெய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்ற போது, ஸ்ரீ சாந்தும், புவனேஸ்வரி குமாரிக்கும் காதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
2வது வீரர்...
27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்களையும், 53 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 75 விக்கெட்களையும், 10 டுவென்டி 20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்களையும் ஸ்ரீசாந்த் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக ஆடிய 2வது கேரள வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.