தாஜ்மஹாலை தத்து எடுத்துக் கொள்ளுங்கள்.. தனியாருக்கு தாரைவார்த்த உ.பி அரசு!
தாஜ்மஹாலை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது.
லக்னோ: தாஜ்மஹாலை தனியார் நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தர பிரதேச அரசு கோரிக்கை வைத்து இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை நீக்க சொல்லி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு உலகம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தாஜ்மஹாலின் பராமரிப்பு பணிகள் தனியாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பல தனியார் நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறது.
ஏன் நீக்கம்
தாஜ்மஹால் முகாலய அரசால் கட்டப்பட்டது அது இந்தியக் கட்டிடக் கலை இல்லை என்பதால் , பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்தும் தாஜ்மஹால் நீக்கப்பட்டது. அதே சமயத்தில் சில பாஜக தலைவர்கள் அது ஒரு இந்து கோவில் என்றும் குறிப்பிட்டு வந்தனர்.
பராமரிப்பு
தற்போது இதன் பராமரிப்பை அம்மாநில அரசு கைவிட்டு இருக்கிறது. இனி தாஜ்மஹாலில் அரசு நியமித்து இருக்கும் துப்புரவு பணியாளர்களும் வெளியேற்றப்பட இருக்கிறார்கள். தனியார் நிறுவனம் வரும் வரை மட்டுமே அரசு பணியாளர்கள் இருப்பார்கள்.
காரணம்
தற்போது பாஜக அரசு முக்கியமான சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி முக்கியமான சுற்றுலாதலங்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் தற்போது தாஜ்மஹாலை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார்கள். தனியார்தான் அந்த பகுதியின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நிறுவனம்
ஐடிசி மற்றும் ஜிஎம்ஆர் என்ற இரண்டு நிறுவனங்கள் இந்த போட்டியில் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 2 சதவிகிதத்தை தாஜ்மஹால் பராமரிப்பிற்கு கொடுக்க வேண்டும். இதற்கான ஏலம் இன்னும் சில தினங்களில் நடக்க இருக்கிறது.