2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்.. ராம்தேவ் பரபர பேச்சு
அலிகார்: எந்த மதத்தவராயினும் இரண்டு குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
அலிகாரில் நடந்த நிகழ்ச்சியின்போது இவ்வாறு கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் ராம்தேவ். இதுகுறித்து அவர் பேசியதாவது: இந்துக்களாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும், அவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவராக இருந்தால் அவர்களின் வாக்கு உரிமையை அரசு பறிக்க வேண்டும். நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அவர் பல்வேறு வழிமுறைகளை கையாள வேண்டும்..
நாளுக்கு நாள் பெருகி வரும் நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நாம் இருவர் நமக்கு இருவர் என்று வாழும் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறப்பு வேலை வாய்ப்புத் தகுதி, மருத்துவ சிகிச்சை, கல்வி வசதி, வாக்கு உரிமை என்று அரசு சலுகைகள் அளிக்க முன் வர வேண்டும். அப்படி இல்லாமல், இரண்டுக்கும் அதிகமான குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு இவை மறுக்கப்பட வேண்டும்.
மக்கள் நினைத்தால் மட்டுமே, மக்கள் தொகையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.52 வயதுக்கு முன்னராக திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு சிறப்புத் தகுதி, சலுகைகள் வழங்க வேண்டும். 2050ம் ஆண்டு இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என்கிற கணிப்பு உள்ளது.
இதை உண்மையாக்க இந்தத் திட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.1997 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமது பதஞ்சலி நிறுவனம், மிகப் பெரிய வெற்றி இலக்கை நோக்கி நடைப்போட்டுக் கொண்டு இருப்பதாகவும் பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
ராம்தேவ் மட்டுமல்ல சமீபகாலமாக சில பாஜக தலைவர்களும் கூட 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசி வருவது குறிப்பிடத்தக்கது. பாபா ராம்தேவின் பேச்சால் சலசலப்பு அதிகரிக்கும் என்றே தெரிகிறது.