நர்மதா அணை நீர் மட்டத்தை உயர்த்த மேதா பட்கர் கடும் எதிர்ப்பு
அகமதாபாத்: குஜராத்தில் நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டுள்ளது. இதில் 121.92 மீட்டர் உயரத்துக்கு நீர் தேக்கப்படுகிறது. இந்த உயரத்தை 138.68 மீட்டர் அளவுக்கு உயர்த்திக்கொள்ள, நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் இந்த அணையால் பாசன வசதி பெறுகிற நிலப்பரப்பின் அளவு அதிகரிக்கும்.
பிரதமர் நரேந்திரமோடி இதற்காக நீண்ட காலம் குரல் கொடுத்து வந்தார். அவர் பிரதமர் பதவி ஏற்ற ஒரு மாதத்திற்குள் இந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள நர்மதா கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துவிட்டது. இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் ஆனந்த பென் பட்டேல் வெளியிட்டார். ஆனால் சர்தார் சரோவர் அணையின் நீர் மட்டத்தை உயர்த்த அனஉமதி அளித்திருப்பதற்கு சமூக சேவகி மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஜனநாயக விரோதம், மக்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். என மேதா பட்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். பல காலமாக இவர், இந்த அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.