நர்ஸ்களை மீட்டதில் அபாரம்.. சபாஷ் ஏர் இந்தியா!
டெல்லி: என்னதான் ஏர் இந்தியா குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள், குறைபாடுகள் இருந்தாலும் கூட ஈராக்கிலிருந்து இந்திய நர்ஸ்களை மீட்பதில் அது காட்டிய துரித செயல்பாடுகள் அதற்கு பெரிய சபாஷ் போட வைத்து விட்டது. அப்படி ஒரு புத்திசாலித்தனமான, விரைவான செயல்பாட்டை அது நர்ஸ்கள் மீட்பு விஷயத்தில் காட்டியுள்ளது.
சேவை சரியில்லை, நஷ்டம் என்று பல சிக்கல்களில் மாட்டியுள்ள அரசு நிறுவனம்தான் ஏர் இந்தியா. ஆனால் ஈராக்கிலிருந்து நர்ஸ்களை இந்தியா கொண்டு வருவதற்காக அது செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.
மிகவும் துரிதமாகவும், சமயோசிதமாகவும் அது செயல்பட்டு ஒட்டு மொத்த இந்தியர்களையும் கவர்ந்து விட்டது.
சிறப்பு விமானம்.. ஏஐ 161
ஈராக்கிலிருந்து இந்திய நர்ஸ்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக ஏஐ 161 என்ற சிறப்பு விமானத்தை ஏர் இந்தியா பயன்படுத்தியது.
ஈராக் அரசு போட்ட முட்டுக்கட்டைகள்
இந்தியாவிலிருந்து அர்பில் நகருக்கு சிறப்பு விமானத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது ஏர் இந்தியா. அப்போது ஈராக் தரப்பிலிருந்து ஒரு தகவல் வந்தது. அதாவது அர்பில் நகரில் எரிபொருள் நிரப்ப பணம் தர வேண்டும் என்பதே அது. ஆனால் மறுபடியும் தொடர்பு கொண்ட ஈராக் அதிகாரிகள், அர்பில் நகரில் எரிபொருள் நிரப்பும் வசதி இல்லை என்று கூறி விட்டனர்.
பெரிய விமானத்தை அனுப்ப முடிவு
இதனால் என்ன செய்வது என்று யோசித்த ஏர் இந்தியா, தனது பெரிய போயிங் 777-200 விமானத்தை அனுப்ப தீர்மானித்தது. அதுதான் ஏஐ 161. இது பெரிய எரிபொருள் டேங்க் வசதி கொண்டதாகும். ஈராக் போய் இந்தியா திரும்பும் வரை எரிபொருள் நிரப்பத் தேவைப்படாது என்பதால் இதை அனுப்ப முடிவு செய்ய்பட்டது.
டெல்லி - அர்பில் - கொச்சி - டெல்லி
இதுதான் ஏர் இந்தியா போட்ட திட்டம். மேலும் டெல்லிக்கு அனைவரையும் கொண்டு வந்த பின்னர் அவர்களுக்கு சாப்பாடு தருவதற்கான ஏற்பாடுகளையும் ஏர் இந்தியாவே செய்து விட்டது.
நான்கு சிறப்பு விமானிகள்
இதையடுத்து கேப்டன் பங்கஜ் அகர்வால், அதுல் சந்திரா, இணை விமானிகள் எஸ்.பி. சின்ஹா, அதார் பூரி ஆகிய அனுபவம் வாய்ந்த நான்கு விமானிகளை இந்தப் பயணத்திற்கு அது தேர்வு செய்தது. இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக விமான பயணம் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.
அடுத்தடுத்து ஈராக்கியர்கள் செய்த குழப்பம்
ஆனால் விமான பயணத்தின்போது ஈராக் விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அடுத்தடுத்துக் குழப்பம் விளைவித்தனர். முதலில், ஈராக் வான் பகுதியில் நுழைய எட்டு நிமிடங்களே இருந்த நிலையில் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
குவைத்துக்குத் திருப்ப முடிவு
இதனால் அருகில் உள்ள குவைத்துக்கு விமானத்தைத் திருப்பி அங்கு இறங்கி பின்னர் அர்பில் செல்ல விமானிகள் திட்டமிட்டனர்.
பிரதமர் தலையிட்டதால் அனுமதி
மேலும் இதுகுறித்த விவரம் உடனடியாக டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் துரிதமாக செயலில் இறங்கி சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி ஈராக் வான் பகுதி வழியாக அர்பில் நகருக்கு விமானத்தை தரையிறக்க அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை 2.20 மணிக்கு அர்பில் நகரில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது.
ஒரு மணி நேரத்தில் புறப்பாடு
அர்பில் விமான நிலையத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே விமானம் இருந்தது. மேலும் அர்பில் நகரிலிருந்து மீண்டும் டெல்லி திரும்பும் திட்டம் கைவிடப்பட்டு மும்பைக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டது. காரணம், எரிபொருள் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக. டெல்லியை விட மும்பை பக்கம் என்பதால் இந்த முடிவை எடுத்தனர்.
கொச்சிக்கு நேரடியாக செல்லவும் தயக்கம்
மேலும் அர்பில் நகரிலிருந்து கொச்சிக்கு நேரடியாக செல்வதிலும் யோசனை இருந்தது. எனவே மும்பைக்குச் செல்ல முடிவானது.
என்ன கொடுத்தாலும் சரி
எதற்கும் முன்னெச்சரிக்கையாக, உள்ளூரில் எரிபொருள் கிடைக்குமா என்றும் ஏர் இந்தியா விமானிகள் கேட்டுப் பார்த்தனர். 3000 லிட்டர் மட்டுமே கிடைக்கும் என்று பதில் வந்தது. அதற்கு விமானிகள் எவ்வளவு கிடைத்தாலும் பரவாயில்லை என்று தெரிவித்தனர்.
கடைசி நிமிடத்திலும் கட்டையைக் கொடுத்த ஈராக்
இதையடுத்து இந்தியர்கள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். முடிந்தவரை எத்தனை பேரை ஏற்ற முடியுமோ அத்தனை பேரையும் ஏற்ற கேப்டன் ஆர்வமாக இருந்தார். இதைப் பார்த்த ஈராக் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர், நமது கேப்டனிடம், 30 இந்தியர்களுக்கு மேல் தாயகம் திரும்ப விரும்பவில்லை. அவர்களையும் ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்டாராம்.
விமானிகளின் சமயோஜிதம்
இப்படியாக பல சிக்கல்களைச் சந்தித்த நமது விமானிகள் 46 நர்ஸ்கள், 129 பிற இந்தியத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வெற்றிகரமாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தனர். இதில் நர்ஸ்கள் அனைவரும் கொச்சியில் இறக்கப்பட்டனர். ஹைதராபாத்தில் 73 பேரும், டெல்லியில் 56 பேரும் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர்.
கண்டிப்பாக ஏர் இந்தியாவுக்கும், அதன் அருமையான விமானிகளுக்கும் நாம் சபாஷ் போடலாம்.!