நாட்டின் அதிவேக ரயில் டால்கோ- சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை எட்டியது!
டெல்லி: நாட்டிலேயே அதிவேகமான டால்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை செய்யப்பட்டதில் மணிக்கு 180 கி.மீ என்ற முழு வேகத்தை எட்டியுள்ளது.
டால்கோ ரயில் பெட்டிகள் ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணிக்கும் போது தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள், எடை தாங்கும் திறன் மற்றும் ரயிலின் வேகம் போன்றவற்றை கருத்தில் கொண்டு சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது. டெல்லி- ஆக்ரா இடையில் அமைந்திருக்கும் மதுரா- பல்வால் இடையே சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 120 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 84 கி.மீ தூரத்தை 53 நிமிடங்களில் ரயில் கடந்தது. இதையடுத்து கடந்தவாரம் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில், டால்கோ எக்ஸ்பிரஸ் அதன் முழு வேகமான மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டது. அப்போது மதுரா-பால்வால் இடையே உள்ள 84 கி.மீ. தொலைவை வெறும் 39 நிமிடங்களில் டால்கோ கடந்து சாதனை படைத்தது. இந்த தொலைவை கடக்க வழக்கமாக 90 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ரயில் மட்டும் வெறுமனாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மதுரா-பல்வால் இடையே டால்கோ ரயிலில் சுமைகளை ஏற்றி இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தின் போது டால்கோ அதன் முழு வேகமான 180 கி.மீ வேகத்தை எட்டியது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயிலின் முழுவேகம் குறித்த சோதனை நிறைவடைந்துள்ளது. இனி டால்கோ ரயிலின் எமர்ஜென்சி நிறுத்தம் குறித்து சோதனை செய்யப்படவுள்ளது. இந்த சோதனையானது ஜுலை 26-ந் தேதி வரை நடைபெறும். நாங்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட ரயில் பெட்டிகளை சோதனை செய்வது வழக்கம் தான். ஆனால் டால்கோ ரயில் மூன்று கட்டமாக சோதனை நடத்தப்படுகிறது. எனக்கு தெரிந்து ரயில் 3 கட்டமாக சோதனை ஓட்டம் செய்வது இது தான் முதல் முறை. இந்த ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.
தற்போது ராஜ்தானி எஸ்க் பிரஸ் மணிக்கு 130 கி.மீ. வேகத் திலும் சதாப்தி எக்ஸ்பிரஸ் 150 கி.மீ. வேகத்திலும் இயக்கப் படுகிறது. கதிமான் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சென்று நாட்டின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றிருந்தது. அந்தப் பெருமையை தற்போது டால்கோ எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளது.