இந்திய எல்லைகளில் தலிபான்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தலாம்... பாக். எச்சரிக்கை!
டெல்லி: நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் வாகா மற்றும் கண்டாசிங் எல்லைப் பகுதிகளில் தலிபான்கள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் முயற்சிகள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பானது ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், ஆகஸ்ட் 13,14,15 ஆகிய தேதிகளில் வாகா எல்லையில் நடைபெறும் கொடி அணிவகுப்பு மற்றும் கசூரின் கண்டாசிங் எல்லைப் பகுதிகளில் தற்கொலைப் படை தாக்குதலை நடத்த தெஹ்ரிக் இ தலிபான் என்ற அமைப்பின் ஃபசலுல்லா குழு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்காக 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 16 தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் கூறப்படுகிஅது.
இதுவரை லாகூர் எல்லைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.