இறையாண்மை முக்கியம்... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சில்லை.. ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: பிரிவினைவாதிகளுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் இந்தியாவின் இறையாண்மையை காப்பது மிக அவசியம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. ஜுலை 9ம் தேதி தொடங்கிய கலவரம் மூன்று மாதங்களாகியும் இன்னும் அடங்கவில்லை. இந்தக் கலவரத்திற்கு இதுவரை சுமார் 70 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, காஷ்மீர் கலவரத்தை நிறுத்தி அமைதி ஏற்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 20 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 26 எம்பிக்கள் அடங்கிய குழு ஒன்று காஷ்மீர் சென்று, பல்வேறு தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது ஹுரியத் அமைப்பு உட்பட அனைத்து பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்தும் அதனை அவர்கள் ஏற்கவில்லை.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கி கொள்ள போவதாகவும் அவர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் தூசித் தட்டி எடுத்து விசாரிக்கப்பட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பிரிவினைவாத தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பண உதவி வருவதை தடை செய்யவும், வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களது விசாக்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதனிடையே காஷ்மீருக்கு சென்று வந்த அனைத்துக் கட்சிக் குழு கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. அதில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த எம்பிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்,
இந்தக் கூட்டத்தின் இறுதியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் காஷ்மீரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் நிலவரத்தை சமாளிக்க மாநில அரசு தவறிவிட்டது என்று மெக்பூபா அரசு மீது கூட்டத்தில் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.
காஷ்மீர் சென்று வந்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச உள்ளார்.