டெல்லியில் 7வது நாளாக தொடரும் போராட்டம்.. பாதி மொட்டை அடித்த தமிழக விவசாயிகள்
டெல்லி: மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் சிலர் பாதி மொட்டை அடித்து போராட்டம் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 50 விவசாயிகள் கடந்த 16-ந்தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் விதவிதமான போராட்ட முறைகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் தங்கள் தலையில் தாங்களே செருப்பால் அடித்துக்கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பின்னர் தங்களைத் தானே துடைப்பத்தால் அடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இந்நிலையில் 7வது நாளான நேற்று அனைத்து விவசாயிகளும் மனித மண்டை ஓடுகள், விஷ பாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகளில் சிலர் தலையில் பாதி மொட்டையடித்து, அதாவது முன் பக்கத்தில் மட்டும் முடிகளை மழித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், மத்திய, மாநில அரசுகள் எங்களை கண்டு கொள்ள மறுக்கின்றன. இந்த அரசுகள் விவசாயிகளை பாதி மொட்டையடித்து விட்டன. அதை உணர்த்தும் வகையில் போராட்டம் நடத்தினோம் என்றார்.