மைசூரில் தமிழ் நடிகர்கள் தங்கியருந்த லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் தாக்குதல் #mysuru
மைசூரு: மைசூரில் தமிழ் நடிகர், நடிகையர் தங்கியிருந்த ஹோட்டலில் கன்னட போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸார் விரைந்துள்ளனர்.
மைசூரில் உள்ள லலிதா மஹால் பேலஸ் ஹோட்டலில் ஒரு தமிழ்த் திரைப்படப் படக்குழுவினர் தங்கியிருந்தனர். படப்பிடிப்புக்காக அவர்கள் வந்திருந்தனர். லலிதா பேலஸ் ஹோட்டலில்தான் பல்வேறு தமிழ் நடிகர், நடிகையரும் தங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென அந்த ஹோட்டலை வன்முறைக் கும்பல் முற்றுகையிட்டது. ஹோட்டல் பாதுகாவலர்களை அடித்துத் தள்ளி விட்டு உள்ளே புகுந்த அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்பு ரத்து செய்து விட்டதாகவும், நடிகர், நடிகையர் தமிழ்நாட்டுக்குத் திரும்பப் போவதாகும் கூறி ஹோட்டல் நிர்வாகம், வன்முறையாளர்களை சமாதானப்படுத்த முயற்சித்தது. போலீஸாருக்கும் தகவல் போய் அவர்களும் விரைந்து வந்தனர்.
இந்த சம்பவத்தால் மைசூரில் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரிப் பிரச்சினையில் மைசூரு, மண்டியா ஆகிய நகரங்களில் தொடர்ந்து தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.