மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு... தமிழ் நீக்கப்படவில்லை... பிரகாஷ் ஜாவடேகர் தகவல்
மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் நீக்கப்படவில்லை என பிரகாஷ் ஜாவடேகர் தகவல் தெரிவித்தார்.
டெல்லி: மத்திய ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்படவில்லை என பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
கேந்திரிய வித்யாலயா, நவோதயா போன்ற பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற சிபிஎஸ்இ வாரியம் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே பணி கிடைக்கும்.
இந்நிலையில் தேர்விற்கான மொழித் தேர்வில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 17 மொழிகளை மத்திய அரசு நீக்கியதாக தகவல் வெளியானது.
கடந்த ஆண்டு வரை மொத்தம் 20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்த நிலையில் தற்போது அதில் இருந்து தமிழ் உள்பட 17 மொழிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்தார். மேலும் தமிழ் உள்ளிட்ட மொழிகள் நீக்கப்பட்டதாக வெளியான தகவலையும் அவர் மறுத்துவிட்டார்.