பிச்சைக்காரர்களைவிட மோசமாகிவிட்டோமே.. டெல்லி போராட்டத்தில் செருப்பால் அடித்துகொண்ட தமிழக விவசாயிகள்
டெல்லி: எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, டெல்லியில் தமிழக விவசாயிகள் தலையில் செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
ஆனால் தமிழக அரசோ எம்எல்ஏக்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கி நேற்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டது. இதை அறிந்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
நாட்டின் முதுகெலும்பான தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சுய லாபத்தை பார்த்துக்கொண்டனரே என்ற ஆதங்கம் அவர்களுக்கு.
Delhi: Tamil Nadu farmers demanding loan waiver beat themselves with chappals in protest, say they are unhappy with hike in TN MLAs' salary. pic.twitter.com/SI9eq7AaT1
— ANI (@ANI_news) July 20, 2017
கோபத்தை எப்படி காட்டுவது என தெரியாத விவசாயிகள், தங்கள் செருப்பை கழற்றி தங்களையே அடித்துக்கொண்டனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. நாட்டில், பிச்சைக்காரர்களைவிட மோசமான நிலையில் இருப்பது விவசாயிகள்தான் என்று அய்யாகண்ணு கூறினார்.
சம்பளத்தை இரட்டிப்பாக பெற்ற எம்எல்ஏக்கள் கொண்டாடி வரும் நிலையைில், விவசாயிகள் தலைநகரில் செருப்பால் அடித்து திண்டாடிக்கொண்டுள்ளனர்.