காவிரி மேலாண்மை வாரியம் கோரி டெல்லியில் 4வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி தமிழக விவசாயிகள் பிஆர்.பாண்டியன் தலைமையில் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 4வது நாளாக நீடிக்கிறது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் கடந்த மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த அமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்துக்குள் அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த காலக்கெடு இன்றுடன் முடிகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரதப் போரட்டம் நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் கடந்த 26ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் 4வது நாளாக விவசாயிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.