ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழக ஆளுநர் (பொறுப்பு )வித்யாசாகர் ராவ் இன்று மாலை சந்தித்து பேசினார்.
டெல்லி: டெல்லியில் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழக ஆளுநர் (பொறுப்பு )வித்யாசாகர் ராவ் இன்று மாலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க துணை ராணுவப் படையை அனுப்பியது மத்திய அரசு. இதனிடையே மறைந்த ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போலீசார் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததாக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று பாராட்டு தெரிவித்திருந்தார். அதேநேரம் சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை டெல்லி சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராஜ்நாத்சிங்கிடம் வித்யாசாகர் ராவ் விளக்கியதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.