ரயில்வே பட்ஜெட்: டெல்லியில் இருந்து தென் தமிழகத்திற்கு தினசரி ரயில் விடப்படுமா?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தென் தமிழகத்துக்கான தினசரி ரயில் சேவைக்கான அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பில் டெல்லி வாழ் தமிழர்கள் உள்ளனர்.
நாடாளுமன்றத்தில் 2016 -17 ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யவுள்ளார். இதில் தமிழகத்துக்குச் சாதகமான அறிவிப்புகள் வெளியாகுமா? என்றும் தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நடப்பு நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் கடந்த ஆண்டை போலவே, தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த பட்ஜெட்டில், புதிய ரயில்கள் மற்றும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
ஏற்கனவே நிலுவையில் இருக்கும், அகல மற்றும் இரட்டை ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணி நடக்கிறது. பல பாதைகள் பயன்பாட்டுக்கும் வந்துள்ளன. எனவே, இன்றைய பட்ஜெட்டில், கடந்த முறை விடுபட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், புதிய ரயில் சேவை, சேவை நீட்டிப்பு, புதிய ரயில் பாதை திட்டங்கள் அறிவிக்கப்படும் பட்சத்தில், தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பு உள்ளது.
மதுரை - குமரி இரட்டை ரயில் பாதைக்கான திட்ட மதிப்பீடு, 2,000 கோடி ரூபாய். 2015 - 16 பட்ஜெட்டில், 77 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய நிலையில், இம்முறையாவது போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். செங்கோட்டை - புனலுார் அகல ரயில் பாதை பணிக்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு அவசியம்
நிதி ஒதுக்கீடு
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் ரயில் எஞ்ஜின் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் குறித்த அறிவிப்பும் வெளியாக வேண்டும். கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் இருந்து, அதிகளவில் ரயில்கள் இயக்கும் வகையில், அந்த ரயில் நிலையங்களை முனையமாக மாற்றும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மதுரை - போடி அகல ரயில்பாதை
மதுரை - போடி அகல ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்ட போதிலும், திட்ட மதிப்பீட்டு அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்குவதுடன், போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
சபரிமலை ரயில்பாதை திட்டம்
தென் மாவட்ட மக்கள் சபரிமலை சென்று வர வசதியாக, ரயில் பாதை திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. திண்டுக்கல் - பெரியகுளம் - தேனி - போடி - குமுளி (120 கி.மீ.,) செல்லும் இந்த பாதையை, 1,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நிறைவேற்ற முடியும். தெற்கு ரயில்வே சார்பில் நான்கு முறை ஆய்வு நடத்தப்பட்டு, இதற்கான அறிக்கையும், ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்.
ரயில்கள் இயக்கப்படுமா?
கேரளா - வேளாங்கண்ணி வாராந்திர ரயில், எழும்பூர் - நாகர்கோவில் இடையே, வார இறுதியில் சிறப்பு ரயில்; சென்னை - திருச்செந்துார் இடையே, விழுப்புரம் - விருத்தாசலம் - லால்குடி - திருச்சி வழியாக ரயில், கன்னியாகுமரி - டெல்லி திருக்குறள் வாரம் இருமுறை ரயிலை, தினசரி ரயிலாக இயக்குவது தொடர்பான அறிவிப்புகள், பட்ஜெட்டில் வெளியாக வேண்டும் என, எதிர்பார்க்கிறோம் என்று ,தென் மாவட்ட ரயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
டெல்லியில் இருந்து தினசரி ரயில்
டெல்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களில் பலர் திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி போன்ற தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டுமானால் வாரம் இரு முறையோ ஒரு முறையோ மட்டுமே டெல்லியில் இருந்தோ அதன் வழியாகவோ செல்லக் கூடிய ரயில்களை நம்பியே இவர்கள் உள்ளனர். இல்லாவிட்டால் சென்னை சென்று அங்கிருந்து வேறு ரயில் அல்லது பேருந்து மூலம் சொந்த ஊர் போகும் நிலைதான் உள்ளது.
திருக்குறள் எக்ஸ்பிரஸ்
டெல்லியில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் "திருக்குறள் எக்ஸ்பிரஸ்' ரயில் வாரம் இரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் எனக் கடந்த எட்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சென்னை வரை இயக்கப்பட்டு வரும் "கிரான்ட் டிரங்க்', "தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்' ஆகிய ரயில்களை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ் ரயில் பயணிகள் சங்கத் துணைத் தலைவர் ஆர்.சூடாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.