பாப்பிரெட்டிபட்டி பழனியப்பனுக்கு பிடி வாரண்ட்.... ரிசார்ட்டுக்கு தேடி போன தமிழக போலீஸ்
பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்எல்ஏ பழனியப்பனைத் தேடி குடகு ரிசார்ட் வரை சென்று விசாரணை நடத்தியுள்ளனர் தமிழக போலீசார்.
Recommended Video
குடகு: பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ பழனியப்பனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரை தேடி குடகில் உள்ள ரிசார்ட் வரை சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தினகரன் ஆதரவு எம்எம்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட்டிற்கு தமிழக போலீசார் திடீரென சென்று விசாரணை செய்தனர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேர் சோமவார்பேட்டை தாலுகா, குஷால்நகர் எல்லை 7வது ஓசகோட்டை என்ற பகுதியில் தனியார் சொகுசு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
தினகரன் உத்தரவு
எம்எல்ஏக்களை யாரிடமும் பேசக்கூடாது என்று டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளதால், செய்தியாளர்களிடம் அவர்கள் தலைக்காட்டாமல் உள்ளனர். அவர்களை சந்திக்க செய்தியாளர்கள் முயற்சித்தாலும் ரிசார்ட் பாதுகாவலர்கள் அனுமதிக்காமல் தடுத்து வருகிறார்கள். செல்போன்களும் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டுள்ளது.
குடகில் தமிழக போலீஸ்
இதனிடையே இன்று கோவை பதிவு எண் கொண்ட வாகனங்களில் தமிழக போலீசார் குஷால் நகருக்கு சென்றனர். விடுதிக்குள் சென்று அங்கு தங்கியுள்ள எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர்.
காண்டிராக்டர் தற்கொலை வழக்கு
நாமக்கலில் காண்டிராக்டர் சுப்ரமணியன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பழனியப்பன் எங்கே?
இதனையடுத்து குஷால் நகர் சென்ற போலீசார் எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த ரிசார்ட்டில் பழனியப்பன் இல்லை என்று தகவல் தெரியவரவே வெறும் கையுடன் போலீசார் திரும்பியதாக தெரிகிறது.
சுப்பிரமணியன் தற்கொலை
கடந்த மே மாதம் 8ஆம்தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள செவிட்டுரங்கன் பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சுப்ரமணியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
பழனியப்பனிடம் விசாரணை
இந்த தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த ஜூலை மாதம் 22ஆம்தேதி நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பழனியப்பன் ஆஜரானார். அதன்பின்னர் இருமுறை சம்மன் அனுப்பியும் பழனியப்பன் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.