டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் கோட்டை விட்ட தமிழக அரசு.. ஜல்லிக்கட்டு ஊர்தி இல்லாதது ஏன்?
டெல்லி: குடியரசு தின விழாவில் ஜல்லிக்கட்டை தூக்கிப் பிடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டை வேண்டுமென்றே தமிழக அரசு இருட்டடிப்பு செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசார, பண்பாட்டு விழா என்பதால் அதற்கு தடையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பெரும் புரட்சியையே நடத்தினர் தமிழக இளைஞர்கள்.
மெரினாவில் விழுந்த தீப்பொறி, தமிழகமெங்கும் காட்டுத் தீயாக பரவியது. ஒரு வாரம் நடைபெற்ற யுக புரட்சிக்கு பிறகு, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சட்டசபையிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
|
ஒற்றுமை
தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் என ஒட்டுமொத்த தமிழினமும் ஒற்றுமையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள், ஐரோப்பா என உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தி தமிழர்கள் ஒற்றுமையை பறைசாற்றினர்.
எதிர்பார்ப்பு
இந்நிலையில்தான், இன்று குடியரசு தின விழாவில் தமிழக ஊர்தி பங்கேற்றது. அதில் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்று தமிழகமே எதிர்பார்த்திருந்தது.
கிராமத்து திருவிழா
தமிழர் கலாசாரத்தை வெளிப்படுத்தும் கிராமத்து கோயில் திருவிழாவை கண்முன் காட்டும், காட்சிகள் ஊர்தியில் இடம் பெற்றிருந்தது. கரகாட்டம், நாதஸ்வர காட்சிகளும், பெரிய அம்மன் சிலை ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதிலேயே காளையை இளைஞர்கள் அடக்குவது போன்ற காட்சி இருந்திருந்தால் இந்தியாவே அதை உற்று பார்த்திருக்கும்.
நல்ல வாய்ப்பு
தமிழக அரசுக்கும் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அக்கறையுள்ளது என்ற ஒரு சமிக்ஞை தேசிய அளவில் பரவியிருக்கும். இப்படி ஒரு நல்ல வாய்ப்பை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். வட இந்தியாவில் பலரும் ஜல்லிக்கட்டு என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆடப்படும் விளையாட்டு அல்லது மிருக வதை என நினைத்துக்கொண்டுள்ளனர். தமிழக அரசின் ஊர்தியில் ஜல்லிக்கட்டு காட்சி இடம்பெற்றிருந்தால் சில தவறான புரிதல்களை அது மாற்ற உதவி செய்திருக்கும்.
இருட்டடிப்பா
இந்த விஷயங்கள் எல்லாம் தமிழக அரசுக்கும், அதன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்காது. தெரிந்திருந்தும் வேண்டுமென்றே ஜல்லிக்கட்டு விஷயத்தை தமிழக அரசு இருட்டடிப்பு செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இளைஞர்களின் புரட்சிக்கு மாநில அரசின் ஆதரவு இருந்ததாக கூறிக்கொள்ளும் அரசு அவர்கள் போராட்டத்தை இருட்டடிப்பு செய்தது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அணி வகுப்பில் கரகாட்டத்தை காட்சிப்படுத்திவிட்டு, ஜல்லிக்கட்டு விவகாரத்தை மறக்கடித்துள்ளது தமிழக அரசு. அரசின் இந்த நடவடிக்கை மாநிலத்திலுள்ள பல லட்சம் அளவிலான ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.