இனியாவது தீருமா மீனவர்களின் சோகம்.. இரு நாட்டு மீனவர்களுக்கான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது
இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து டெல்லியில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை தொடங்கியது.
டெல்லி: இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தை டெல்லியில் தற்போது தொடங்கி உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா-இலங்கை நாடுகளின் வெளியுறவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் கலந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துயரம் என்கிற ரீதியில் பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது. இவர்கள் எதிர்க்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய இலங்கை அரசுகள் நடவடிக்கைகள் எடுத்தன. அதன் அடிப்படையில் இரு தரப்பு மீனவர்களும் ஒரே மேஜையில் அமர்ந்து விவாதித்து முடிவெடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டன.
இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஜவகர் பவனில் இன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 அமைப்புகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்றுள்ளனர். அதே போன்று புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த 4 மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் டெல்லி சென்றுள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.
இதே போன்று, இலங்கை யாழ்ப்பாணம், மன்னார், முள்ளிவாய்க்கால், வன்னி பகுதிகளைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கச்சத்தீவு பிரச்னை, இலங்கையில் பல மாதங்களாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை மீட்பது, தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கச் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும், சர்வதேச கடல் பகுதி அருகே மீன்பிடிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம், இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து, வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இரு நாட்டு வெளியுறவு மீன் வளத் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
முன்னதாக 2004 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் இரு நாட்டு மீனவர்களும் அலுவல்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை வேண்டுகோளின்படி இரு நாட்டு மீனவர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆனால் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.