டாடா குழும தலைவராக சந்திரசேகரன் பொறுப்பேற்பு! சவால்களை சமாளிப்பாரா சாதனை தமிழர்?
டாடா குழுமத்தின் புதிய தலைவராக தமிழரான, என்.சந்திரசேகரன் இன்று பொறுப்பேற்றார்.
மும்பை: தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டார்.
முன்னதாக தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரி கடந்த ஆண்டு நீக்கப்பட்டார். இதையடுத்து, டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த என்.சந்திரசேகரன் (53) புதிய தலைவராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் இன்று பொறுப்பேற்றார். 150 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் பார்சி இனத்தைச் சாராத முதல் நபர் சந்திரசேகராவார்.
புதிய பணி சவால்கள் நிறைந்தது என்று கருத்து தெரிவித்த அவர், அந்த சவாலை மாறுபட்ட வழியில் திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவதாக நம்பிக்கை தெரிவித்தார். ரூ.1,000 கோடிக்கும் மேலாக இழப்பை ஏற்படுத்தியுள்ள ரத்தன் டாடாவின் கனவான நானோ கார் திட்டம் குறித்தும் முடிவெடுக்கும் பொறுப்பும் சந்திரசேகரனுக்கு தலையில் விழுந்துள்ளது.
நீண்ட தூர மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான சந்திரசேகரன் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர். பல்வேறு வெற்றிகளைக் குவித்த சந்திரசேகரன், ரூ.7 லட்சம் கோடி மதிப்புள்ள உலகளாவிய டாடா குழுமத்தின் நிர்வாகப் பிரச்னைகளை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர்.