ஷார்ஜாவில் அல்லல்படும் தமிழர்கள்...உயிர்வாழ போராட்டம்
அமீரகத்திற்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழர்கள் தனித்து விடப்பட்டதால் அவர்கள் உணவு, தங்குமிடமின்றி சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஷார்ஜா : ஷார்ஜாவில் பணிக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகர்கள் உணவு மற்றும் தங்குமிடம் இன்றி தவித்து வருவதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த பரக்கத் அலி மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் பணியாளர்கள் விசாவில் செல்லாமல் விசிட் விசாவில் சென்றுள்ளனர். இவர்களை பணிக்கு அழைத்து சென்ற நிறுவனம் விசிட் விசாவில் வந்து பின்னர் வேலைக்கான விசாவாக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
ஆனால் அமீரகம் சென்றவுடன் தமிழகர்களை வேலைக்கு அழைத்து சென்ற நிறுவனம் அவர்களை வேலைக்கு விட்டுவிட்டு அவர்களது சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு சென்று விட்டது.
வேலை செய்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சென்ற தமிழர்கள் தற்போது தங்க இடமின்றியும், சாப்பிடுவதற்கு வழியின்றியும் தவித்து வருகின்றனர்.
நேசனல் பெயிண்ட் பகுதி அருகே இவர்கள் தங்கியுள்ள இடமானது மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அமீரகத்தில் மிகவும் கடுமையான வெப்பம் நிலவி வருவதால் அவர்களது பாடு மிகவும் திண்டாட்டமாக இருந்து வருகிறது.
அப்பாவிகளான இவர்களுக்கு உணவு வழங்க விருப்பம் உள்ளவர்கள் 055 256 2019 / 052 598 3044 ஆகிய எண்களில் தொடர்பு வழங்கலாம் என்று வாசகர் ஒருவர் கூறியுள்ளார்.