தமிழக முழு அடைப்பு: ஆதரவு குரல் கொடுத்த தமிழக மக்களுக்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம் நன்றி
பெங்களூரு: கர்நாடகத்தில் தமிழக மக்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய தமிழக மக்களுக்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடக வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கள் கேட்டது ஆறுதலாக உள்ளது என்றும் தமிழ்ச்சங்கத்தலைவர் தாமோதரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கத்தலைவர், கோ.தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டியது தமிழகம் - கர்நாடக அரசுகளின் முக்கிய கடமையாகும். ஆனால் காவிரிச்சிக்கல் எழும்போதெல்லாம் கர்நாடக மாநிலத்தில் வாழும் தமிழர்களை அச்சுறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு பெங்களூரு, மைசூருவில் மிகப்பெரிய கலவரம் வெடித்ததை யாராலும் மறக்க முடியாது.
பெங்களூரு வன்முறை
25 ஆண்டுகள் கடந்த பின்னரும் காவிரிச் சிக்கல் எழும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துவம், வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த போராட்டங்களின் போது தமிழர்களுக்கு எதிரான வன்மங்கள் கன்னட அமைப்புகளின் தலைவர்கள் மூலம் வெளிப்பட்டது.
தமிழர்கள் அச்சம்
இதனால் கர்நாடக தமிழர்களிடையே அச்ச உணர்வு எழுந்ததை அடுத்து,கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா,உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வர், ஆகியோரைச் சந்தித்து கர்நாடக வாழ் தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம்.
தமிழர்கள் மீது தாக்குதல்
கடந்த 12ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக பெங்களூருவில் ஆங்காங்கே தமிழர்களின் சொத்துக்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டன. தமிழர்களுக்கு சொந்தமான ஹோட்டல்கள், உணவகங்கள், அங்காடிகள் மீது கல்வீசி தாக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
ஆதரவு குரலுக்கு நன்றி
இதுபோன்ற சம்பவங்கள் கர்நாடகா வாழ் தமிழர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியது. இந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து கர்நாடக வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கள் கேட்டது ஆறுதலாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்புகளும் அமைதியான முறையில் ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியதற்கு பெங்களூரு தமிழ்ச்சங்கம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்று பெங்களூரு தமிழ்ச்சங்கத்தலைவர், கோ.தாமோதரன் கூறியுள்ளார்.