ஜெயலலிதா மரணம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழிசை
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும், அதற்கு சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லி: ஜெ.மரணத்துக்கு சிபிஐ விசாரணை தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ள டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசுதான் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தமிழக அரசு தான் தீர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும், சிபிஐ விசாரணை கோரக் கூடாது'.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று கூறி மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.
ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த நிலையில்தான் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழிசை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.