ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையருடன், தமிழக தேர்தல் அதிகாரி சந்திப்பு
டெல்லி: சட்டமன்றத் தேர்தலோடு ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்துடன், தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு மீண்டும் பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பை இன்னும் சில தினங்களில் வெளியிடவும், வாக்குப்பதிவை பிப்ரவரி கடைசி வாரத்தில் நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்தை சந்தித்து பேசினார். தமிழகத்தில் வாக்காளர் இறுதிப் பட்டியலை வெளியிடுவது பற்றியும், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்தும் கேட்டறிந்தார்.
இதையடுத்து, டெல்லி சட்டமன்றத் தேர்தலோடு ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை பிப்ரவரி மாதத்தில், தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.