நடிகை ரோஜாவுக்கு ஆதரவு... தமிழக நடிகர்கள் பிரச்சாரத்தில் கலகல
Recommended Video
ஆந்திரா: நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக, தமிழக நகைச்சுவை நடிகர்கள் கலகலப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வாக்காளர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
நடிகை ரோஜா ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தலோடு 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது நகரி தொகுதி, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.15,88,77,083 சொத்து.. அம்மாவிடம் 5 லட்சம் கடன்.. ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் அடடே
கடும் போட்டி
ஆளும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், ஜன சேனா கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரி தொகுதியில் 50 சதவீதம் பேர் தமிழர்களே உள்ளனர். இந்த தொகுதியில் ரோஜா தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழக-ஆந்திர எல்லையான திருத்தணியை ஒட்டியிருக்கும் நகரியில் ரோஜாவுக்காக அவரது கணவர் ஆர்.கே. செல்வமணி உட்பட திரைபிரபலங்கள் பலர் வீதி, வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக நடிகர்கள் பிரச்சாரம்
இந்த நிலையில், ரோஜாவுக்கு ஆதரவாக தமிழக நகைச்சுவை நடிகர்கள் வெங்கல்ராவ், முத்துக்காளை, திருப்பாச்சி பெஞ்சமின் ஆகியோர், தமிழர்கள் அதிகம் உள்ள ஏகாம்பரகுப்பம், புதுப்பேட்டை, சந்திர வாடா பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி, பிரச்சாரம் செய்தனர். தமிழில் நகைச்சுவையாக பேசி அங்குள்ள பொதுமக்களை அவர்கள் கவர்ந்தனர்.
ரோஜா வாக்குறுதி
திருப்பதி ஏழுமலையான் கோவில் எதிரே இருந்த தொன்மை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபத்தை சந்திரபாபு நாயுடு தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடித்து தரைமட்டமாக்கினார் என குற்றம்சாட்டி உள்ள நடிகை ரோஜா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அதே இடத்தில் மீண்டும் ஆயிரங்கால் மண்டபம் கட்டப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் பதவி?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒதுக்கிவிட்டு, நகரி தொகுதியில் முகாமிட்டுள்ள ரோஜாவை எதிர்த்துப் போட்டியிடும் தெலுங்குதேச வேட்பாளர் காலி பானு பிரகாஷுக்கு ஆதரவு குறைவாக உள்ளதாக கூறப்படுவதால், ரோஜா மகிழ்ச்சியில் இருக்கிறார். மேலும் இந்த முறை ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ். ஆர் ஜெகன் மோகன் வெற்றி பெற்று முதலமைச்சராகும் பட்சத்தில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.