டெல்லியில் தமிழக விவசாயிகள் 'தாலி அறுக்கும்' போராட்டம்
நேற்று ஆண் விவசாயிகள் சிலர் பெண்களை போல் சேலைகளை அணிந்து போராட்டம் நடத்தினர். இன்று சேலையுடன், தாலியும் அணிந்த அதே விவசாயிகள், அதை அறுத்து போராட்டம் நடத்தினர்.
டெல்லி: டெல்லியில் இன்று சேலை அணிந்த தமிழக ஆண் விவசாயிகள் 'தாலி அறுக்கும்' போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 33வது நாளை நிறைவு செய்துள்ளது. விவசாயிகள் விதம் விதமாக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
நேற்று ஆண் விவசாயிகள் சிலர் பெண்களை போல் சேலைகளை அணிந்து போராட்டம் நடத்தினர். இன்று சேலையுடன், தாலியும் அணிந்த அதே விவசாயிகள், அதை அறுத்து போராட்டம் நடத்தினர். மற்ற விவசாயிகள், இவர்களது தாலிகளை அறுக்க, அவர்கள் ஒப்பாரி வைத்து அழுது ஆர்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழகம் மற்றும் தேசியக் கட்சிகளின் ஆதரவு கூடி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய தலைவர் டி.ராஜா, அக்கட்சி விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் குணசேகரன் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர் டாக்டர்.துரைமாணிக்கம் ஆகியோர் நேரில் வந்து ஆதரவளித்து உரையாற்றினர்.
இதேபோல, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போராட்டக்காரர்களுடன் கலந்து பேசினார்.