வாரணாசி தேர்தலில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய தமிழக விவசாயிகள்..போலீஸ் மிரட்டுவதாக புகார்
வாரணாசி: பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட, தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டியகத்தினர் 40 பேர், மோடியை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் இதற்காக வாரணாசிக்குச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள், மோடி தலைமையிலான அரசு விவசாயத்தை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்களுக்கு உரிய விலையை வழங்க மத்திய அரசு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்
வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து தாங்கள் களமிறங்க செலுத்தப்பட்ட டெபாசிட் தொகை, பல்வேறு நன்கொடை அளிப்பவர்களிடம் இருந்து பெறப்பட்டது என விவசாயிகள் கூறியுள்ளனர்.
உங்களில் யாராலும் எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது.. ஈரான் பகீர் மிரட்டல்.. அமெரிக்காவுடன் மோதல்!
மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவர் மீண்டும் பிரதமரானால் நாடு மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து என்ற அடிப்படை கருத்தை வலியுறுத்தியுமே அவரை எதிர்த்து போட்டியிடுவதாக கூறியுள்ளனர் விவசாயிகள்.
இதனிடையே மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய செல்லும் விவசாயிகளை, உள்ளூர் போலீஸார் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. வாரணாசியில் உங்களுக்கு என்ன வேலை என்று கேள்வி கேட்டு தங்களை மிரட்டுவதாக வாரணாசி போலீஸார் மீது தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.