டெல்லியில் 13வது நாளாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம்.. வைகோ நேரில் ஆதரவு
காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 13 வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 13வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 13வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று தற்கொலை மிரட்டல்
நேற்று 12வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது 3 விவசாயிகள் திடீரென்று அங்குள்ள மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். கையில் கயிற்றையும் வைத்து தூக்கு மாட்டிக் கொள்ளப்போவதாக எச்சரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் விதித்த நிபந்தனை
அவர்கள் 3 பேரையும் கீழே இறங்கும்படி மற்ற விவசாயிகள் சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் மத்திய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், எங்கள் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
விஷால் குழுவினர் பேச்சுவார்த்தை
டெல்லியில் விவசாயிகளை சந்திக்க நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கினர்.
வைகோ நேரில் ஆதரவு
டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 13-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.