கண்டுகொள்ளாத மத்திய அரசு.. டெல்லியில் 100வது நாள் போராட்டத்தை முடித்துக்கொண்ட தமிழக விவசாயிகள்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 100 நாட்களை கடந்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு, விவசாயிகள் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவந்தார்கள்.
ஜூலை 16ம் தேதி முதல் நடந்துவந்த போராட்டம் நேற்று 100வது நாளை எட்டியது. இதையடுத்து போராட்டத்தை நிறைவு செய்ய அவர்கள் முடிவு செய்தனர். விவசாயிகள் நேற்று தங்களது கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, "விவசாயிகள் கழுத்தை அறுக்காதீர்கள்" என்று கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்.
இதன்பிறகு போராட்டத்தை முடித்துக்கொண்டு விவசாயிகள் அனைவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு புறப்பட்டனர்.
முன்னதாக நிருபர்களிடம், அய்யாக்கண்ணு கூறியதாவது: இந்த ஆண்டில் மொத்தம் 141 நாட்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. அடுத்த மாதம் 20, 23ம் தேதிகளில் 5 லட்சம் விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளோம் என்று தெரிவித்தார்.