காவிரி: பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயற்சி- பி.ஆர்.பாண்டியன் உட்பட 50 தமிழக விவசாயிகள் கைது
காவிரி மேலாண்மை வாரியத்தை 3 மணிக்குள் அமைக்காவிட்டால் பிரதமர் வீடு முற்றுகையிடப்படும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
டெல்லி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடச் சென்ற தமிழக விவசாயிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த மாதம் 16ம் தேதி உத்தரவிட்டது. வாரியம் அமைப்பதற்கு ஆறு வார கால கெடுவும் அளித்தது.
ஆனால், இதுவரை மத்திய அரசு காவிரி வாரியம் அமைப்பதற்கான எந்தப்பணியும் துவங்கவில்லை. இது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி முதல் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகத் தேர்தலை மனதில் வைத்து காவிரி விவகாரத்தில் மத்திய பாஜக அரசு தமிழக மக்களை வஞ்சிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், தமிழக அரசு இனியும் இந்த விஷயத்தில் மெளனம் காப்பது சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று பிற்பகல் மூன்று மணிக்குள் காவிரி வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், அதை செயல்படுத்தாவிட்டால் இன்று மாலை தமிழக விவசாயிகள் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அவர்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் வீட்டை முற்றுகையிடச்சென்ற பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.