அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் பன்வாரிலால் காட்டிய அக்கறையும், சர்ச்சையும் பற்றி தெரியுமா?
டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் தீவிரம் காட்டியதால் சர்ச்சைக்குள்ளானவர் தற்போது தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்.
77 வயதாகும் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவின் பணிச்சுமை குறைக்கப்பட்டு, அவர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் என்ற நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த பன்வாரிலால் புரோஹித், காங்கிரஸ், பாஜக, தனிக்கட்சி என அரசியலில் பல ஆவர்த்தனங்கள் செய்தவர்.
இரு தேசிய கட்சிகளிலும் உறுப்பினர்
மகாராஷ்டிராவின் விதர்ப்பா மாவட்டத்தை சேர்ந்த பன்வாரிலால் புரோஹித், 1979 மற்றும் 1980களில் காங்கிரஸ் சார்பில் சட்டசபையில் காலடி வைத்தவர். நாக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து 3 முறை எம்.பியானவர். 1984 மற்றும் 1989ல் காங்கிரஸ் சார்பிலும், 1996ல் பாஜக சார்பிலும் வென்றார்.
கரசேவையில் ஈடுபட்ட பன்வாரிலால்
இந்துத்துவா கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்ட பன்வாரிலால் புரோஹித், அயோத்தியில் 1991ல் கரசேவையில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 8 வருடங்கள் பாஜகவில் இணைந்திருந்த பன்வாரிலால் புரோஹித் 1999ல் கட்சியை விட்டு விலகி, விதர்ப்பா ராஜ்ய கட்சி என்று ஒன்றை ஆரம்பித்தார். லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். 2009ல் பாஜக சார்பில் நாக்பூரிலிருந்து போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து
2007ம் ஆண்டு பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட ஒரு கருத்து, காங்கிரஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1989ல் அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் பாலாசாகேப் டியோராஸ் மற்றும் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி ஆகியோரை தான் 1 மணி நேரம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், அப்போது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ராஜிவ்காந்தி சம்மதித்து அதற்கு பதிலாக 1989ம்ஆண்டு லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவை காங்கிரசுக்கு கேட்டு பெற்றதாகவும், பன்வாரிலால் புரோஹித் கூறிய கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
பத்திரிகையின் எடிட்டர்
1911ம் ஆண்டு, சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலேயால் தொடங்கப்பட்ட ஹிதவாடா ஆங்கில நாளிதழின் மேலாண் எடிட்டராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.