2 நாளைக்கு எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார் ஆளுநர்.. நாளை காலை வித்யாசாகர் ராவ் சென்னை வருகை
ஆளுநர் வித்யாசாகர் ராவின் மகாராஷ்டிரா மாநில நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை காலை அவர் சென்னை வருகிறார்.
மும்பை: நாளை காலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், திடீரென உதகையிலிருந்து டெல்லி கிளம்பி சென்றார். நேற்று டெல்லியிலிருந்து அப்படியே, மும்பை சென்றுவிட்டார்.
இதனால் சசிகலா தரப்பு அதிர்ச்சியடைந்தது. இன்று பதவி பிரமாணம் செய்ய முடியாமல் தவித்தது. எனவே மத்திய அரசுக்கு சசிகலாவை முதல்வராக்க விருப்பம் இல்லை என்ற செய்திகள் பரவின.
இந்நிலையில், ஆளுநரின் உதவியாளர் உமேஷ் தன்னை தொடர்புகொண்ட நிருபர்களிடம் கூறுகையில், ஆளுநர் இன்று மாலை அல்லது நாளை சென்னை வருவார் என தெரிவித்தார். இதனால் சசிகலா தரப்பு சற்று நிம்மதியடைந்தது.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தின் முழு நேர ஆளுநரான வித்யாசாகர் ராவின் அடுத்த 2 நாட்களுக்கான நிகழ்ச்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டதாக மாலையில் தகவல் வெளியானது. புதன்கிழமை காலை வித்யாசாகர் ராவ் சென்னை செல்வார் என்று, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
எனவே புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் வித்யாசாகர் ராவ் சென்னையில்தான் தங்கியிருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. முதல்வராக பதவியேற்க ஏற்கனவே சசிகலா திட்டமிட்ட தினம் வரும் 9ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.