மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சந்திப்பு
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சருமான பியூஷ் கோயலை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சந்தித்து பேசினர். அப்போது, அதிமுக எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரையும் உடனிருந்தார்.
பின்னர் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி டெல்லியில் பேட்டியளித்தனர்.
வேலுமணி கூறுகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கைவிடுத்தோம். கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஜிஎஸ்டி வரியால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எடுத்துரைத்தோம். உள்ளாட்சி தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. வேகமாக உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழகம் கேட்ட தொகையை மத்திய அரசு முழுமையாக கொடுத்துள்ளது என்றார்.
அமைச்சர் தங்கமணி கூறுகையில், நிலக்கரி ஒதுக்கீடு அளவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். மத்திய அரசு தமிழகத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பது தவறான தகவல். ஏற்கனவே தமிழகம் கேட்ட அளவுக்கு நிலக்கரியை அனுப்பியுள்ளார்கள். இப்போது மழைக்காலம் நெருங்குவதால், கூடுதல் நிலக்கரி தேவை என கோரிக்கை முன் வைத்துள்ளோம் என்றார்.
நகர மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.3,558 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று, கோரிக்கை மனுவில் தமிழக அரசு கோரிக்கைவிடுத்துள்ளது.